மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங்குவதே
முதலில் கடைசி இரண்டு வரிகளுக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூவாசைகளால் ஏங்கி, அலைந்து ஓய்ந்துபோகச் செய்யும் இந்த உலகமாயையுள் சிக்கி, செய்யவேண்டியவற்றை செய்யாது தயங்குவதை
முதல் இரண்டு வரிகளுக்கான அர்த்தங்கள் ...
அர்த்தம் 1
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய
உன் பெயரை கூறியும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே
அர்த்தம் 2
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய நீ
உன் ஆறுமுகங்களாலும் உபதேசம் செய்தும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே
அர்த்தம் 3
மிகப்பெரிய மாயைகள் எனப்படும் சுத்த,அசுத்த மாயைகளையே களையக்கூடிய வல்லமை படைத்த தலைவனாகிய
உன் ஆறுமுகங்களின் தத்துவம் அறிந்தும் (சகமாயையுள் நின்று தயங்குவதை) நான் ஒழியவில்லையே
அகம் - வீடு - மண்ணாசை
மாடை - மாடு - செல்வம் - பொன்னாசை
மடந்தையர் - பெண்கள் - பெண்ணாசை
ஆட்சிசெய்வோர் பிறநாட்டின்மீது போர்தொடுப்பது மட்டுமே மண்ணாசையில்லை... ஒரு சொந்தவீட்டிற்காகவும், நிலத்திற்காகவும் சாமானியர்கள் நடத்தும் வாழ்க்கைப்போராட்டமும் மண்ணாசையால் நடப்பதே.
மூவாசைகளால் எவ்வித தகாதசெயல்கள் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. இதில் எதனால் மனம் அலைக்கழிக்கப்பட்டாலும் அது அனுபூதிக்கு தடையே.
ஆறுமுகம் என்பதை தத்துவரீதியாக பலவிதங்களில் பொருள்கொள்ளலாம்.
- சிவன், சக்தி ஆகிய இரண்டின் தன்மைகளும் இணைந்தது (சிவனின் ஐந்து முகங்கள் + சக்தியின் முகம்)
- உடம்பினுள் இருக்கும் ஆறு ஆதாரங்கள்
- உலகை நாம் உணரும் விதம் (ஐம்புலன்கள் + மனம்)
- ஆறு திசையையும் பார்ப்பது (நான்கு திசைகள் + மேல் + கீழ்)
(இன்னமும் இருக்கலாம் ...)
மாயை என்பது குறித்த கருத்துக்கள் பல உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக்கொண்டிருப்போம். அவற்றில் எனக்கு ஏற்புடைய கருத்து இது ...
மாயை என்பது மாறிக்கொண்டே இருப்பது, ஒரு நிலையில் நில்லாதது தோன்றி மறைவது. மாயை என்பது இயற்கை, உலகவாழ்க்கைக்கு அவசியமானது, நமக்கு எதிரியல்ல.
மாறுகிறது என்பதை உணராமல் நாம் இருந்து கொண்டிருப்பது, கண்கூடாக தெரியும் ஒன்றைப்பாராமல் பழைய நினைவுகளாலேயே அதைப்பார்ப்பது போன்றவை நமக்கு கேடுவிளைவிக்கக்கூடியவை, அதனால் மாயை தவறு என்று சொல்லக்கூடாது. அப்படி சொல்வது முள் குத்தியது என்று சொல்வது போன்றது, முள் வந்து குத்துவதில்லை நாம்தான் கவனமின்றி முள்மீது கால்வைப்போம், முள்ளைக் குறைசொல்வோம்.